திருமருகல் துணை மின் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் இல்லாததால் 70 கிராமங்களில் மின்சார பணிகள் பாதிப்பு


திருமருகல் துணை மின் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் இல்லாததால் 70 கிராமங்களில் மின்சார பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 10 April 2019 10:45 PM GMT (Updated: 10 April 2019 7:22 PM GMT)

திருமருகல் துணை மின் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் இல்லாததால் 70 கிராமங்களில் மின்சார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகலில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணைமின் நிலையம் மூலம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் திருமருகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், திருப்புகலூர், வவ்வாலடி, ஏனங்குடி, அம்பல், பொரக்குடி, கிடாமங்கலம், விச்சூர், குரும்பூர், சித்தம்பல் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் துணை மின் நிலைய அலுவலகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மின் பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் நாகூர், கங்களாஞ்சேரி ஆகிய இடங்களில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர்கள் திருமருகல் துணை மின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, கூடுதல் பொறுப்பு வகித்து 2 அலுவலகங்களையும் கவனித்து வருகின்றனர். இதனால் மின்சார பணிகள் பாதிக்கப்படுகிறது.

திருமருகல் ஒன்றியத்தில் மருங்கூர் உள்ளிட்ட பல கிராமங்களில் மின்மாற்றிகள் அமைப்பதற்கு நடைபெற்ற பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த துணை மின் அலுவலகத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் மின்பாதையில் ஏற்படும் குறைபாடுகளை 16 பேர் பார்க்க வேண்டிய வேலையை 4 பேர் மட்டுமே பார்த்து வருகின்றனர். கிராமங்களில் திடீரென ஏற்படும் மின் குறைபாடுகளை சரி செய்ய முடியாமலும், மின் விபத்துக்களை உடனடியாக சென்று தடுக்க முடியாமலும் ஊழியர்கள் அலைக்கழிக்கப்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். இதனால் கிராமங்களில் மின்சார பணிகள் பாதிக்கப்படுகிறது என்று மின் நுகர்வோர்கள் கூறினர்.

மேலும் கிராமங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மின் பாதையில் ஏற்படும் தடைகள் போன்ற பணிகளை உடனுக்குடன் செய்து கொடுக்க முடியாமல் உள்ளது. துணை மின் அலுவலகத்தில் குறைந்த அளவில் பணிபுரியும் ஊழியர்கள் மின்சார பணிகளை விரைந்து முடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே 8 ஆண்டுகளாக காலியாக உள்ள உதவி மின் பொறியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். துணை மின் அலுவலகத்திற்கு போதுமான ஊழியர்களை பணியில் அமர்த்தி கிராமங்களில் அதிகரித்து வரும் மின் குறைபாடுகளை குறைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story