எந்த விஷயத்தையும் செய்து முடிக்க மாணவ-மாணவிகளுக்கு திறமை, மன உறுதி வேண்டும்


எந்த விஷயத்தையும் செய்து முடிக்க மாணவ-மாணவிகளுக்கு திறமை, மன உறுதி வேண்டும்
x
தினத்தந்தி 10 April 2019 10:30 PM GMT (Updated: 10 April 2019 8:34 PM GMT)

எந்த விஷயத்தையும் செய்து முடிக்க மாணவ-மாணவிகளுக்கு திறமையும், மனஉறுதியும், வேண்டும் என பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கூறினார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் கல்லூரி என்ற குளத்தில் மிகப்பெரிய மீன்களாக இருந்தீர்கள். ஆனால் போட்டிகள் நிறைந்த இந்த உலகமெனும் கடலில் ஒரு மிகச்சிறிய மீன்களாக நீங்கள் இருப்பீர்கள்.

நீங்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் உங்களைவிட திறமைபடைத்தவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து வருவார்கள். அதுபோல் நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் பல்வேறு நாடுகளில் இருந்து வருபவர்களை நீங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

கல்லூரியை விட்டு வெளியே வந்த பின்னர் நீங்கள் சந்திக்கும் போட்டிகள் மிகவும் கடினமாக இருக்கும். நம்மால் முடியாது என்ற ஒரு விஷயத்தை எங்கோ இருக்கும் ஒருவர் மிகச்சாதாரணமாக அதை செய்து முடித்திருப்பார்.

எந்த விஷயமும் சாத்தியமே. எந்த விஷயத்தையும் செய்து முடிக்க உங்களுக்கு திறமை, மனஉறுதி இரண்டும் வேண்டும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அந்த அளவு மட்டுமே பலன் கிடைக்கும். பல மொழிகளை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் தமிழ்மொழியில் உள்ள அனைத்து சிறப்புகளும் உங்களுக்கு தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்டமளிப்பு விழாவில் கல்லூரி துறைத்தலைவர்கள் வாசுதேவன், அன்பரசு, அசோக்குமார், ரமேஷ், ராமநாதன், அருணாச்சலம், பெரியசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே கல்லூரியில் நேற்று முன்தினம் ஆண்டுவிழாவும், விளையாட்டு விழாவும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறைத் தலைவர் பாரி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

Next Story