எதிர்க்கட்சியாக கூட வர முடியாது: பா.ஜனதாவுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் எச்.வசந்தகுமார் பேச்சு


எதிர்க்கட்சியாக கூட வர முடியாது: பா.ஜனதாவுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் எச்.வசந்தகுமார் பேச்சு
x
தினத்தந்தி 10 April 2019 11:00 PM GMT (Updated: 10 April 2019 8:58 PM GMT)

எதிர்க்கட்சியாக கூட பா.ஜனதா வர முடியாது. அவர்களுக்கு மக்கள் இந்த தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்.வசந்தகுமார் தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார்.

திருவட்டார்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று அழகியமண்டபம் சந்திப்பு பகுதியில் திறந்த ஜீப்பில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் ‘கை‘ சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசியதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் நான் வியாபாரிகளின் பிரதிநிதியாக நிற்கிறேன். நான் சார்ந்த தொழிலை செய்கின்ற வியாபாரிகளாகிய உங்கள் ஆதரவோடு நான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். அவ்வாறு நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பேன்.

எனக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் ஆகியோர் குமரி மாவட்டம் வருகிறார்கள். பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் எதற்காக ஓட்டு கேட்டு வருகிறார் என்று தெரியவில்லை. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கித்தருவேன் என்று கடந்த தேர்தலின் போது சொன்னார். அதை நிறைவேற்றினாரா? சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார். யாருக்கும் வேலை தரவில்லை. ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்றார். அதுவும் போடவில்லை.

பா.ஜனதா கட்சி ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் மக்களை வஞ்சித்து விட் டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மக்களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் கொடுக்க இருக்கிறார். மேலும் நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் தள்ளுபடி என அறிவித்துள்ளார். ஆனால் பா.ஜனதா கட்சியை சேர்ந்த நீங்கள் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள். ஆட்சியை இழக்கப்போகும்போது உங்களுக்கு கோபம் வருகிறது. நீங்கள் செய்த தவறுக்கு நீங்கள் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். எனவே இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். எதிர்க்கட்சி வரிசையில் கூட மோடியால் வர முடியாது. காங்கிரஸ் இயக்கம் அனைத்து மக்களையும் வேறுபாடு இல்லாமல் பார்க்கிற இயக்கமாக இருக்கிறது. அதனால் இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு ‘கை‘ சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் மேக்கா மண்டபம், வேர் கிளம்பி, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, முதலாறு, வீயன்னூர், மாத்தூர், ஆற்றூர் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘கை‘ சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இதில் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேக்காமண்டபத்தில் மாற்றுக்கட்சியினர் 50 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Next Story