தேர்தல் பாதுகாப்பு பணியில் 6,500 பேர் ஈடுபட உள்ளனர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தகவல்


தேர்தல் பாதுகாப்பு பணியில் 6,500 பேர் ஈடுபட உள்ளனர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தகவல்
x
தினத்தந்தி 11 April 2019 10:45 PM GMT (Updated: 11 April 2019 4:54 PM GMT)

வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் உள்பட 6 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தெரிவித்தார்.

வேலூர், 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அதே நாளில் தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகள், ஆம்பூர், சோளிங்கள், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் என 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும், வாக்குப்பதிவின் போது எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறும் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் பணியில் போலீசாருடன் இணைந்து முன்னாள் படைவீரர்களும் ஈடுபட உள்ளனர். அதேபோன்று துணை ராணுவ வீரர்களும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் தேர்தலையொட்டி காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் காவல்துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களில் வேலூரும் ஒன்று. எனவே தேர்தல் பாதுகாப்பு பணியில் அதிக போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 347 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஆந்திர மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 10 துணை ராணுவ படை குழுவினர் வேலூருக்கு வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்டம் முழுவதும் முன்னாள் படை வீரர்கள், 800 துணை ராணுவ வீரர்கள், போலீசார் என 6 ஆயிரத்து 500 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story