டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் பொதுமக்கள் எச்சரிக்கை


டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் பொதுமக்கள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 April 2019 10:15 PM GMT (Updated: 11 April 2019 8:57 PM GMT)

டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் கூறினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள அத்தியந்தல் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இந்த டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்படும் என்று தகவல் தெரிவித்தனர்.

பின்னர் பொதுமக்கள் தங்கள் போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்தினர். சில நாட்கள் கழித்து மீண்டும் இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு தொடர்ந்து மதுபான விற்பனை நடைபெற்றது. இந்த கடைக்கு வரும் மதுபிரியர்கள் பெண்களை கிண்டல் கேலி செய்வதாகவும், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் அத்தியந்தல் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடை ஊழியர்கள் கடையை மூடி விட்டு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டம் குறைய தொடங்கியதும் மீண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறந்து மதுபான வியாபாரம் செய்து உள்ளனர்.

இதை அறிந்த பொது மக்கள் அந்த டாஸ்மாக் கடையை கற்கள் வீசி அடித்து நொறுக்க முயற்சி செய்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடை மூடிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இந்த டாஸ்மாக் கடை மூடபடுவதாக இல்லை. எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் டாஸ்மாக் கடையை திறப்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர். இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடையை மூடவில்லை என்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை முற்றிலுமாக புறக்கணிப்பதுடன், நாடாளுமன்ற தேர்தல் அன்று எங்கள் கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story