குடிநீர் வழங்காததை கண்டித்து குப்பை லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் பவானியில் பரபரப்பு


குடிநீர் வழங்காததை கண்டித்து குப்பை லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் பவானியில் பரபரப்பு
x
தினத்தந்தி 13 April 2019 10:45 PM GMT (Updated: 13 April 2019 6:44 PM GMT)

குடிநீர் வழங்காததை கண்டித்து பவானியில் குப்பை லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி,

பவானி நகராட்சிக்கு உள்பட்ட 17–வது வார்டு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு திடீரென குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர். இதைத்தொடர்ந்து அந்தப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ஒன்று திரண்டு பவானியில் உள்ள அந்தியூர் பிரிவு நோக்கி சாலை மறியல் செய்ய வந்தனர். அப்போது அந்த வழியாக நகராட்சிக்கு சொந்ததான குப்பை லாரி ஒன்று வந்தது. உடனே பொதுமக்கள் அந்த லாரியை திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி தலைமை பொறியாளர் கதிர்வேல் மற்றும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், பவானி நகராட்சிக்கு உள்பட்ட 17–வது வார்டு மேற்கு பகுதியில் 100–க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மூலம் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக குடிநீர் குழாயில் முறையாக தண்ணீர் வழங்காமல் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு 3 அல்லது 4 குடங்கள் தான் குடிநீர் கிடைக்கிறது.

இதன்காரணமாக எங்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். குறிப்பாக ஒருசிலர் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி விடுகிறார்கள். இதனால் தற்போது எங்களுக்கு முற்றிலுமாக தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு நகராட்சி தலைமை பொறியாளர் கதிர்வேல் கூறுகையில், பவானி நகரப்பகுதியில் சுமார் 1000–க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஒருசிலர் தங்களுடைய வீடுகளில் உள்ள குடிநீர் குழாயில் மின்மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுகிறார்கள். அதனால்தான் மற்றவர்களுக்கு தண்ணீர் சீராக கிடைப்பதில்லை. தற்போது வீடுகளில் சோதனை செய்யப்பட்டு, மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் ரூ.1000–ம் செலவில் தண்ணீர் கட்டுப்பாடு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு சீராக தண்ணீர் கிடைக்கும் என்றார். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள், சிறைபிடித்த லாரியை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story