கோலாப்பூரில் பயங்கர விபத்து பஸ் மீது கார் மோதி 7 பேர் பலி 20 பேர் காயம்


கோலாப்பூரில் பயங்கர விபத்து பஸ் மீது கார் மோதி 7 பேர் பலி 20 பேர் காயம்
x
தினத்தந்தி 14 April 2019 12:04 AM GMT (Updated: 14 April 2019 12:04 AM GMT)

கோலாப்பூரில் அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

மும்பை,

கோலாப்பூர் மாவட்டம் மகாகாவ் கிராமம் அருகே நேற்று மதியம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த கார் ஒன்று பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்து கண்ணாடி உடைந்து சிதறியது.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 7 பேர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும் காயமடைந்த 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், விபத்தில் பலியான 7 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story