‘மத்தியில் மீண்டும் பிரதமர் மோடியின் ஆட்சி அமைய போவது உறுதி’ சேலத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


‘மத்தியில் மீண்டும் பிரதமர் மோடியின் ஆட்சி அமைய போவது உறுதி’ சேலத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 7:22 PM GMT)

‘மத்தியில் மீண்டும் பிரதமர் மோடியின் ஆட்சி அமைய போவது உறுதி’ என்று சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சேலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

நாங்கள் அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி, மெகா கூட்டணி ஆகும். புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். இதன் மூலம் 2-வது முறையாக மத்தியில் மீண்டும் பிரதமர் மோடியின் ஆட்சி அமைய போவது உறுதி. அதே மாதிரி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனிபெரும்பான்மையுடன் அனைத்து சட்டசபை இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்று நிலையான ஆட்சி செய்வதும் உறுதி.

நிதின் கட்காரி பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது மும்பையில் இருந்து புனேவிற்கு 95 கிலோ மீட்டர் தூரத்துக்கு சிமெண்டு சாலை அமைத்தார். இந்த தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜனதா தேர்தல் அறிக்கை, அற்புதமான தேர்தல் அறிக்கை. இதில் பல்வேறு ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்களை நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆனால் தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒன்றுக்கும் உதவாத தேர்தல் அறிக்கை.

வறுமையை ஒழிக்க போவதாக காங்கிரஸ் சொல்லி கொண்டிருக்கிறது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு ஆசை. அவர் தூங்கும் போதும், நடக்கும் போதும், பேசும் போதும், காரில் செல்லும் போதும் என எப்போதும் கனவு காண்கிறார்.

அதாவது, அவருடைய அப்பா இருந்த முதல்-அமைச்சர் நாற்காலியில் அவர் உட்கார வேண்டும் என்பதுதான் அது. அந்த கனவு நிச்சயமாக நிறைவேறாது. ஒரு தொடர்கதையை படிக்கும் போது முற்றும் என்று முடிப்பார்கள். அந்த வகையிலே தி.மு.க.வை அதனுடைய அத்தியாயத்தை முடிக்க போவது மு.க.ஸ்டாலின் தான். இந்த தேர்தலுடன் அது முடிந்து விடும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கு நிதின் கட்காரி பெரும் பங்காற்றினார். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கனவு திட்டம் ஆகும். இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு மிகவும் ஆர்வமாக அவர் இருக்கிறார். இந்த திட்டம் கொண்டு வந்தால் 200 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்கும்.

இந்த பகுதியை பொறுத்தவரைக்கும் மேட்டூர் உபரிநீரை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கொடுப்பதற்கு வேண்டிய எல்லா திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்த உள்ளார். கொளத்தூர் தோனி மடுவு திட்டத்துக்கும் அவர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த மாவட்டத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு திட்டங்களை இரவு, பகலாக திட்டமிட்டு அவருடைய அமைச்சர்கள், அதிகாரிகள் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

பா.ம.க.வும், அ.தி.மு.க.வும் சேர்ந்ததால் மிகப் பெரிய கோட்டையாக உள்ளது. ஆகையால் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெற்றி பெறுவார்.இவ்வாறு அவர் பேசினார்.

Next Story