நம்பியூர் அருகே பரிதாபம் குட்டையில் மூழ்கி வாலிபர் பலி


நம்பியூர் அருகே பரிதாபம் குட்டையில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 April 2019 10:45 PM GMT (Updated: 14 April 2019 7:23 PM GMT)

நம்பியூர் அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

நம்பியூர்,

திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு. இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு ராமச்சந்திரன் (வயது 24) என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். இதில் ராமச்சந்திரன் அந்தப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் ராமச்சந்திரன் மற்றும் அவருடைய நண்பர்கள் 15 பேர் மோட்டார் சைக்கிள்களில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள நடுப்பாளையம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்தப்பகுதியில் உள்ள 20 அடி ஆழ கசிவுநீர் குட்டையில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு ராமச்சந்திரன் சென்றார்.

அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த மற்ற நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் அவர்கள் சத்தம் போட்டு கத்தினர். அவர்களுடைய சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் குட்டையில் குதித்து ராமச்சந்திரனை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராமச்சந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கசிவுநீர் குட்டையில் மூழ்கி இறந்த ராமச்சந்திரனின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Related Tags :
Next Story