ஓட்டு எண்ணும் மையத்தில் பொது பார்வையாளர், கலெக்டர் ஆய்வு


ஓட்டு எண்ணும் மையத்தில் பொது பார்வையாளர், கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 7:24 PM GMT)

ஓட்டு எண்ணும் மையத்தில் திருவள்ளூர் கலெக்டர், பொது பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள ஸ்ரீராம் கல்வி மையத்தில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனை திருவள்ளூர் நாடாளுமன்ற பொதுப்பார்வையாளர் டாக்டர் சுரேந்திரகுமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்து அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுரைகளை வழங்கினார்கள்.
அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேப்பம்பட்டில் அமைந்துள்ள ஓட்டு எண்ணும் மையமான ஸ்ரீராம் கல்வி மையத்தில் திருவள்ளூர் நாடாளுமன்றத்தின் 5 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஸ்ரீராம் வித்யாமந்திர் மேல் நிலைப்பள்ளியிலும், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஸ்ரீராம் தொழில்நுட்ப கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு மாவட்டத்தில் 1,494 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு காவலர் வீதம் அனைத்து வாக்குச்சாவடிக்கும் குலுக்கல் முறையில் திருவள்ளூர் நாடாளுமன்ற பொதுபார்வையாளர் மற்றும் கலெக்டர் முன்னிலையில் இந்தபணிகள் நடைபெற்றது. தேர்தல் பணிகளில் ஈடுபட 3 அடுக்கு காவலர்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மத்திய துணை ராணுவப்படை 4 கம்பெனிகளை சேர்ந்த 400 பேர் வருகைபுரிந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story