அனல்மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு அமைதி பேச்சு வார்த்தை தோல்வி


அனல்மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு அமைதி பேச்சு வார்த்தை தோல்வி
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 8:35 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் அனல்மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுடன் தேர்தல் புறக்கணிப்பு சம்பந்தமாக நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் தொடங்கி 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள மேலூர், கல்லாத்தூர், தேவனூர், கீழகுடியிருப்பு, புதுக்குடி, இலையூர், மருக்காலங்குறிச்சி, தண்டலை உள்ளிட்ட 13 கிராமங்களில் கடந்த 1996-ம் ஆண்டு ஆயிரத்து 210 பேரிடம் 8 ஆயிரத்து 370 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் ஆயிரத்து 30 ஏக்கர் அரசு நிலமும் கையகப் படுத்தப்பட்டது. 25 வருடமாக இத்திட்டத்தை அரசு செயல்படுத்ததால் தொடர்ந்து திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களது பட்டா நிலத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது அனல்மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் கருப்பு கொடியேற்றும் போராட்டமும், தேர்தலை புறக்கணிப்பது எனவும் முடிவெடுத்திருந்தனர்.

கருப்பு கொடி போராட்டத்தை கைவிட்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கூறி, அதற்கான அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் அலுவலகம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் என 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று 4-வது முறையாக ஜெங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சு வார்த்தையின் போது தேர்தல் முடியட்டும் உங்களது கோரிக்கைகளை உயர்மட்ட குழுவிற்கு பரிந்துரை செய்து சுமுக தீர்வு காணப்படும் இப்போது நீங்கள் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும் இது சம்பந்தமாக உங்கள் அனைத்து கோரிக்கைகளும் அரசுக்கு அனுப்பு வைத்துள்ளோம்.

தேர்தல் முடிந்ததும் உங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அதிகாரிகள் கூறினர். இதில் விவசாயிகள் திருப்தி இல்லாததால் அனைவரும் ஒருமித்த கருத்துடன் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் ஜெயங்கொண்டத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story