தோவாளையில் பூக்கள் பதனிடும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


தோவாளையில் பூக்கள் பதனிடும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 9:26 PM GMT)

தோவாளையில் பூக்கள் பதனிடும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தோவாளையில் பிரசாரம் செய்தார். பின்னர் அங்குள்ள மலர் வணிக வளாகத்துக்கு சென்று பூ வியாபாரிகளை சந்தித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக அரசால் தோவாளையில் மலர் வணிக வளாகம் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் தோவாளையில் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பூக்கள் நேரம் ஆக ஆக அழுகிவிடும் நிலையில் ஏற்படுவதால் வியாபாரிகள் நஷ்டம் அடைகிறார்கள். எனவே தோவாளையில் பூக்கள் பதனிடும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்கு தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. வருமான வரித்துறை சோதனையை கண்டு தவறு செய்தவர்கள் தான் அஞ்ச வேண்டும். நான் வந்த வாகனத்தையும் மறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள் என்பது தவறு. தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்“ என்றார்.

இதைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் மாலையில் வடுகன்பற்று அகத்தியர் கோவில் முன் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் கவற்குளம், சந்தையடி, இடையன்விளை, வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம் பள்ளி, தெற்கு வடுகன்பற்று, மலையன்விளை, கருங்குளத்தான்விளை, சரவணந்தேரி, நாடான்குளம், சுக்குபாறை தேரிவிளை, ஏழுசாட்டுபத்து, சமாதானபுரம், ஞானதீபம் பள்ளிக்கூடம் உள்பட பல்வேறு இடங்களுக்கு திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார்.

அவருடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சென்று தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். பிரசாரத்துக்காக சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story