“தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி செல்ல மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தாருங்கள்” கமல்ஹாசன் வேண்டுகோள்


“தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி செல்ல மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தாருங்கள்” கமல்ஹாசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 9:38 PM GMT)

“தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி செல்ல மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தாருங்கள்“ என்று நெல்லை பிரசாரத்தில் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

நெல்லை, 

நெல்லை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வெண்ணிமலையை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரவு பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு திறந்த காரில் நின்றவாறு அவர் பேசியதாவது:-

பாளையங்கோட்டைக்கு என் வணக்கம், நாங்கள் மக்கள் நீதிமய்யம் கட்சியின் நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வெண்ணிமலையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

இந்த தேர்தல் இந்திய நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் ஆகும். இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியின் நிலை என்ன? டெல்லிக்கு சென்று கேள்வி கேட்டும் ஒரு பிரதிநிதியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் என்னோடு பிரசாரம் நடந்த இடத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் மக்கள் நீதிமய்யத்தை தத்தெடுத்து இருக்கிறார்கள்.

நமது மக்களுக்கு தேசிய வியாதியாக மறதி உள்ளது. இன்று நடக்கும் பெரிய பிரச்சினைகளை நாளை மறந்து விடுகிறார்கள். அது அரசியல்வாதிகளுக்கு வசதியாக போய் விடுகிறது.

தூத்துக்குடியில் கருணாநிதி மகளை விரட்டி அடித்து உள்ளனர். ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டும் போது அந்த கட்சியினர் உடனிருந்து உள்ளனர். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் அவர்கள் ஆட்டுகிறார்கள்.

மற்றொரு கழகம் ஸ்டெர்லைக்கு எதிராக சத்தம் போட்டால் வாயிலே சுடுமாறு கூறிஉள்ளது. தேவைப்பட்டால் ராணுவத்தை அனுப்புவதாகவும் கூறிஇருக்கிறார்கள். இந்த நிலை நெல்லைக்கும் வந்து விடக்கூடாது.

குடிநீர் பற்றாக்குறை தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டு உள்ளது. அதை தீர்க்க மக்கள் நீதிமய்யத்தால் மட்டுமே முடியும். எனவே நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெண்ணிமலையையும், டார்ச்லைட் சின்னத்தையும் மறந்து விடாதீர்கள். நீங்கள் டார்ச்லைட் சின்னத்துக்கு வாக்களித்து வெண்ணிமலையை வெற்றி பெறச்செய்யுங்கள். இந்த தேர்தலில் புரட்சிக்கு பெயர் பெற்ற பாளையங்கோட்டை மக்கள் மீண்டும் ஓர் அமைதி புரட்சியை ஏற்படுத்த வேண்டும். வருகிற 18-ந்தேதி டார்ச்லைட் சின்னத்தை வெற்றி பெறச்செய்யுங்கள். தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி செல்ல மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தாருங்கள்.

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளேன். அனைவரையும் என்னுடைய முகமாக கருதி தேர்வு செய்யவேண்டும்.

ஊடகம் நமது கட்சியை இருட்டடிப்பு செய்வதாக கூறுகிறீர்கள். ஊடகம் மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையமும் நமக்கு இடையூறு செய்கிறது. நீலகிரியில் இரவு 10 மணிக்கு மேல் டார்ச் லைட் கொண்டு செல்ல விடாமல் தடை விதித்து உள்ளனர்.

முதன் முறையாக ஓட்டு போடும் இளைஞர்கள் நல்ல திசையை நோக்கி தமிழகத்தை நகர்த்த ஓட்டு போடுங்கள். வருகிற 18-ந்தேதி மக்கள் நீதிமய்யத்தை வெற்றி பெறச்செய்ய புறப்படுங்கள். இதை செய்தால் நாளை நமதே, வெற்றியும் நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story