1,357 வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தப்படும் காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்


1,357 வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தப்படும் காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 4:27 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 1,357 வாக்குச் சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தப்படும் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மண்டல அலுவலருக்கு வாக்குச்சாவடி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கினை எளிதாக பதிவு செய்வதற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கு வாக்காளர் அடையாள அட்டை மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பித்து தங்களது வாக்கை பதிவு செய்யலாம்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,357 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மூலமாகவும் கண்காணிக்க உள்ளது.

மேலும் குடிநீர் மற்றும் மருத்துவ குழுவினரால் வாக்காளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வேட்பாளர்களின் சின்னங்களை தெரிந்துகொள்ளும் வகையில் வாக்குச்சாவடி மையங்களின் நுழைவு வாயில்களில் சுவர் விளம்பரம் மற்றும் விளம்பர பலகைகள் வைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story