சாதி, மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக நின்றால் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும் கமல்ஹாசன் பேச்சு


சாதி, மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக நின்றால் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 11:15 PM GMT (Updated: 15 April 2019 7:05 PM GMT)

சாதி, மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக நின்றால் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும் என்று திருச்சி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

திருச்சி,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஆனந்தராஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திருச்சி ஜங்ஷன் மற்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருச்சியில் முன்பு எனக்கு ஒரு உறவு இருந்தது. தற்போது நிறைய உறவுகள் உள்ளன. திருச்சியில் முன்பு மக்களுக்கு எதிராக நடக்கும் சின்ன, சின்ன விஷயங்கள் கூட எனது அண்ணன் சந்திரஹாசன் மூலமாக வந்து சேரும். அதாவது தண்ணீரில் மஞ்சளை கலந்து சடங்குகள் செய்வார்கள். தற்போது தண்ணீரே மஞ்சள் நிறமாக தான் வருகிறது. உங்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமை. மிருகங்களுக்கு கூட குடிநீரில் கழிவுநீர் கலக்க கூடாது என்பது தெரியும். ஆனால் அது அரசுக்கு தெரியாமல் போனது தான் ஆச்சரியம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பெரிய செலவு ஆகாது. ஆனால் அமைக்காவிட்டால் அதன்பிறகு வரும் வியாதிகளை குணப்படுத்த பலமடங்கு செலவு செய்ய வேண்டியது வரும்.

அரசு பள்ளிகளை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும். அரசு நினைத்தால் அதை செய்யலாம். ஆனால் சாராயத்தை கையில் எடுத்து, கல்வியை தனியாருக்கு கொடுத்ததால் வந்த வினை. அரசு பள்ளிகளை உலகத்தரம் வாய்ந்ததாக மக்கள் நீதிமய்யம் மாற்றும். இது பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் தானே என்று நினைத்துவிடாதீர்கள். திருச்சி தொகுதியின் பிரதிநிதியை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுவரை உச்சரிக்க தெரியாத பெயர்களை உடையவர்கள் தான் பிரதமர்களாக வந்துள்ளனர். தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கமாட்டார்கள் என்று சில வடநாட்டு அரசியல்வாதிகள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக 1980-க்கு பிறகு வந்தவர்கள் தான் அவ்வாறு நினைக்கிறார்கள். நான் யாரை கூறுகிறேன் என்று உங்களுக்கு தெரியும்.

ஏனென்றால் தமிழர்கள் நமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். அதனால் அவர்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? என்று நினைக்கிறார்கள். கொல்கத்தா, மும்பை, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் காமராஜர், அண்ணாதுரை, கக்கன் என்று ஒரு பெயரை காட்டுங்கள். அதுபோன்ற பெயர்கள் இருக்காது. ஆனால் திருச்சியிலோ, மதுரையிலோ, சேலத்திலோ நான் காந்தி என்ற பெயருடைய 100 பேரை காட்டுவேன். சுபாஷ்சந்திரபோஸ், படேல் என எத்தனைபேர் பெயர் வைத்து இருக்கிறார்கள். நாங்கள் டெல்லி தலைவர்களை எங்கள் தலைவர்களாக ஏற்று கொண்டோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அறிஞர் அண்ணா கூறியதுபோல், தற்போது வரை தெற்கு தேய்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்காக தனியாக பிரிந்து செல்ல வேண்டும் என்பதில்லை. கூடவே இருந்து நமது குரலை அழுத்தமாக வைக்க வேண்டும்.

யார் பிரதமராக வந்தாலும் நம்முடைய தமிழகத்தை அவர்கள் கவனிக்கிறார்களா? என தட்டிக் கேட்க வேண்டும். மணல் கொள்ளையை கண் மூடித்தனமாக செய்கிறார்கள். இது மனிதனுக்கு எதிரான முட்டாள்தனமான செயல். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் சரியில்லை என்றால் எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் இங்கே சம்பாதிக்க வரவில்லை. அதேபோல் கைத்தட்டுகிற உங்கள் கையும் சுத்தமாக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். எனக்காக உயிரை கொடுக்கிறேன் என்கிறார்கள். அதை உங்களுக்குள்ளேயே வைத்து கொண்டு, தற்சமயம் உங்கள் ஓட்டை மட்டும் கொடுங்கள். நாம் உயிரை கொடுப்பது முக்கியமல்ல. தமிழகத்தின் உயிரை மீட்டெடுக்க வேண்டும்.

கடந்த அரை நூற்றாண்டுகளாக மாறி, மாறி கழகங்களுக்கு வாக்கு அளித்து என்ன மாற்றத்தை கண்டோம். வருங்கால சந்ததியினர் நல்லபடியாக வாழ பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் உங்களிடம் இருந்து பெருந்தொகையை ஒதுக்கி கொண்டு சில்லரையை உங்களுக்கு தூக்கி எறிகிறார்கள்.

ஏழைகளை பாதுகாக்க முடியாமல், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மக்களை மூன்றாம்தர குடிமக்களாக மாற்றி விட்டார்கள். தமிழகத்தின் நதிக்கரை, நாகரிகம் என்று மார்தட்டி பேசினோம். இப்போது நதிக்கரையும் போய்விட்டது, நாகரிகமும் போய்விட்டது. ஸ்ரீரங்கம் முன்பு இருந்ததுபோல் இல்லை. வருங்காலத்தில் திருப்பதி போல மாற வேண்டும். நல்ல எதிர்காலத்துக்காக உங்கள் ஓட்டுரிமையை ஆயுதமாக பயன்படுத்துங்கள். சாதி, மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக நின்றால் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story