லால்குடியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை குடும்ப தகராறில் துயர முடிவு


லால்குடியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை குடும்ப தகராறில் துயர முடிவு
x
தினத்தந்தி 15 April 2019 11:15 PM GMT (Updated: 15 April 2019 7:48 PM GMT)

லால்குடியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப தகராறு காரணமாக இந்த துயர முடிவை தேடிக்கொண்டனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடி நாகம்மையார் தெருவை சேர்ந்தவர் அருண்பிரபு. இவர், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். லால்குடி அருகே காட்டூர் பகுதியை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ரெஜினா என்ற பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக, கடந்த சில ஆண்டுக்கு முன்பு பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அருண்பிரபு செம்பரை பகுதியை சேர்ந்த தனது உறவுக்கார பெண் பிரதிபாவை கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி இருவரும் லால்குடி பாரதிநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். பிரதிபா 4 மாத கர்ப்பமாக இருந்தார்.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரதிபா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய அருண்பிரபு மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரதிபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட முதல் மனைவி ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது திருமணம் செய்த 2-வது மனைவியும் தற்கொலை செய்து கொண்டதால் அதிக மனஅழுத்தத்துக்கு தள்ளப்பட்ட அருண் பிரபு உறவினர்கள் யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், லால்குடி அருகே தெங்கால் பகுதிக்கு சென்ற அவர், அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த லால்குடி போலீசார் அருண்பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதிபாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமாக இருக்கலாமா? என்று லால்குடி ஆர்.டி.ஓ. பாலாஜியும் விசாரணை நடத்தி வருகிறார்.

ஒரே நாளில் கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story