பண்ருட்டியில், ரெயில்வே தண்டவாள பகுதியில் ரத்தக்காயங்களுடன் டிரைவர் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை


பண்ருட்டியில், ரெயில்வே தண்டவாள பகுதியில் ரத்தக்காயங்களுடன் டிரைவர் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 7:52 PM GMT)

பண்ருட்டியில் ரெயில்வே தண்டவாள பகுதியில் ரத்தக்காயங்களுடன் டிரைவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி,

பண்ருட்டியில் உள்ள ரெயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்திற்கு அருகில் சுமார் 20 வயதுடைய வாலிபர் ஒருவர் தலையில் அடிபட்டு, ஒரு கை முறிந்த நிலையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அதில் அவர் பண்ருட்டி மணிநகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் விஜயகுமார் (வயது 21) என்பது தெரியவந்தது. வேன் டிரைவரான இவர், கடந்த சில நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் விஜயகுமார் ரெயில்வே தண்டவாளம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

தொடர்ந்து இதுபற்றி கடலூர் முதுநகர் ரெயில்வே இருப்புபாதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விஜயகுமார் அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்துவிட்டு அங்கு வீசி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story