ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் - போலீசார் திணறல்


ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் - போலீசார் திணறல்
x
தினத்தந்தி 15 April 2019 10:00 PM GMT (Updated: 15 April 2019 7:54 PM GMT)

ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களில் ஊட்டிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, மேட்டுப்பாளையம்-குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அதுகுறித்த அறிவிப்பு பலகை ஏதும் வைக்கப்பட வில்லை. அதன் காரணமாக புதியதாக வரும் வாகன ஓட்டிகள் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு செல்லாமல், நேற்று குன்னூர் வழியாக சென்றனர். இரு சாலைகளில் இருந்தும் ஊட்டிக்கு அதிகளவில் வாகனங்கள் வந்ததால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அதன் காரணமாக உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்தனர்.

இதற்கிடையே ஊட்டி-குன்னூர் சாலை சவுத்வீக் பகுதியில் நேற்று காலை 9 மணியளவில் லாரி ஒன்று திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. நேரம் செல்ல, செல்ல வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்கிறவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் ஊட்டி சேரிங்கிராசில் இருந்து லவ்டேல் சந்திப்பு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதன் காரணமாக போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பின்னர் லாரி பழுது பார்க்கப்பட்டு, எடுத்து செல்லப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால், ஊட்டியின் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன் காரணமாக சேரிங்கிராஸ், எட்டின்ஸ் சாலை, லோயர் பஜார், கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊட்டி படகு இல்ல வாகன நிறுத்துமிடத்தில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டன.

இதனால் உள்ளே நிறுத்த இடமில்லாமல், சாலையோரங்களில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக ஊட்டி- காந்தல் இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள், மற்ற வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் நிலவியது. 

Next Story