தேசிய கட்சிகளை நம்ப வேண்டாம் டி.டி.வி.தினகரன் பிரசாரம்


தேசிய கட்சிகளை நம்ப வேண்டாம் டி.டி.வி.தினகரன் பிரசாரம்
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 8:00 PM GMT)

தேசிய கட்சிகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், நெசவாளர்கள் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் முனுசாமியை ஆதரித்து கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் ‘மோடி டாடி’ என்கிறார்கள். மோடியை பார்த்து ஓடி, ஓடி காலில் விழுகிறார்கள். ஓட்டுக்கு ரூ.2,000 என்ன? ரூ.2 லட்சம் கொடுத்தாலும் ஆர்.கே.நகர் போன்று அவர்களுக்கு முடிவு கட்ட போகிறீர்கள். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். கையில் இருந்தபோது தான் இரட்டை இலை வெற்றி சின்னம். தற்போது எப்படி? வெற்றி சின்னம் ஆகும்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கக்கூடாது என்று கூறிய தே.மு.தி.க., கடற் கரையில் நினைவு மண்டபம் அமைக்கக்கூடாது என்று கூறிய பா.ம.க.வை எல்லாம் ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்துள்ளனர்.

8 வழிச்சாலை திட்டம் தற்போது கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சேலத்தில் நடந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் முன்னிலையிலேயே 8 வழிச்சாலையை அமைத்தே தீருவேன் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே தேசிய கட்சிகளை யாரும் நம்ப வேண்டாம்.

காஞ்சீபுரத்தில் நெசவாளர்கள் பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைப்போம். தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரக்கூடாது. பட்டு நெசவு பூங்காவை செயல்படுத்துவோம். இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.

கூட்டத்தில் அ.ம.மு.க. நகரச்செயலாளர் என்.மனோகரன், மாவட்ட பொருளாளர் ஆர்.நாராயணசாமி, ஒன்றிய செயலாளர் தனசேகரன் உள்பட திரளான கட்சியினர் கலந்துகொண்டனர்.

Next Story