சிறுவர்களை வெளிநாட்டுக்கு கடத்திய தொழில் அதிபர் கைது மனைவிக்கு வலைவீச்சு


சிறுவர்களை வெளிநாட்டுக்கு கடத்திய தொழில் அதிபர் கைது மனைவிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 April 2019 10:00 PM GMT (Updated: 15 April 2019 8:05 PM GMT)

சிறுவர்களை வெளிநாட்டுக்கு கடத்தி சென்ற தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் கரீம் உமணி. தொழில் அதிபர். இவரது மனைவி லைலா. தம்பதி இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு 7 மற்றும் 10 வயது கொண்ட சிறுவர்களை அமெரிக்கா நாட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு குடியுரிமை அதிகாரிகள் அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் முக்கிய ஆவணங்களை சரிபார்த்தனர்.

இதில் அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கரீம் உமணி மற்றும் லைலாவை அங்கிருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து மும்பை குடியுரிமை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் படி சாகர் போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று சிறுவர்களை வெளிநாட்டிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடிவந்தனர்.

இந்தநிலையில், மும்பை டோங்கிரி பகுதியில் கரீம் உமணி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவி லைலாவை தேடி வருகின்றனர்.

Next Story