அதிகாரிகள் மனு வாங்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


அதிகாரிகள் மனு வாங்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 8:32 PM GMT)

அதிகாரிகள் மனு வாங்காததால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் கொண்டு வரும் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. அந்த பெட்டியில் பொதுமக்கள், தங்களுடைய மனுக்களை போட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள புத்தாம்பூர் குறிச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மனுக்களை அதிகாரிகள் யாரும் வாங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், மனுக்கள் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

அவர்களுடைய மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

குறிச்சிப்பட்டியில் உள்ள குறிச்சி குளத்தில் மழை நீரை தேக்கி வைத்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் எவ்வித அனுமதியும் இல்லாமல் ஆதனக்கோட்டை அருகே உள்ள சோத்துப்பாளையை சேர்ந்த ஒருவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அக்குளத்தில் இருந்து ஏராளமான லாரிகளில் தினமும் மண் அள்ளி வருகிறார். இது தொடர்பாக பலமுறை வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தில் மண் அள்ளிய ஒரு லாரியை பொதுமக்கள் பிடித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த லாரியை அதிகாரிகள் வெள்ளனூர் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் லாரியை விடுவித்து விட்டனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குறிச்சி குளத்தில் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story