நச்சு புகையால் பாதிப்பு, தார் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகை


நச்சு புகையால் பாதிப்பு, தார் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 10:12 PM GMT)

ரெட்டியார்சத்திரம் அருகே நச்சு புகையால் பாதிக்கப்படுவதாக கூறி தார் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் தனியார் தார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை சுற்றி கோட்டைப்பட்டி, ஆதிதிராவிடர் காலனி, கோட்டையூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் கள் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தனியார் தார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக கிராம மக்கள் ஒன்று திரண்டு சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து அந்த தனியார் தார் தொழிற்சாலைமூடப்பட்டது.

இதையடுத்து தற்போது மீண்டும் அந்த தொழிற்சாலை செயல்பட தொடங்கியது. இதனால் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையொட்டி ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் தங்கள் முடிவில் பின் வாங்கவில்லை. இதையடுத்து தொழிற்சாலையில் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தொடர்ந்து தொழிற்சாலை செயல்பட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

Next Story