ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய திட்டமிடுகிறார்கள் - ரங்கசாமி குற்றச்சாட்டு


ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய திட்டமிடுகிறார்கள் - ரங்கசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 April 2019 11:15 PM GMT (Updated: 15 April 2019 10:50 PM GMT)

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய ஆட்சியாளர்கள் திட்டமிடுவதாக ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நெடுஞ்செழியனும் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று தட்டாஞ்சாவடி தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தார்.

அப்போது ரங்கசாமி பேசியதாவது:-

புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு எந்தவித நன்மையையும் செய்யவில்லை. மலிவு விளம்பரத்தில் நாட்டம் கொண்டுள்ள இந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும். அதற்கான தேர்தல்தான் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அவர்களது ஆட்சி போய் விடுமோ என்ற பயத்தில் நமது எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்துகொண்டு வரப்பட்டதுதான் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல். அசோக் ஆனந்தைப்போல் நமது வேட்பாளர் நெடுஞ்செழியனும் தற்போது வெற்றிபெறுவார். இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 7-ல் இருந்து 8 ஆக உயரும்.

என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஆகியோரையும் தகுதிநீக்கம் செய்யலாமா? என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் உள்ளனர். தவறுகளை மறைக்க எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க பார்க்கின்றனர். அதில்தான் அவர்களது கவனம் உள்ளது. மக்களுக்கான பணிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றுவதில் ஆட்சியாளர்களின் கவனம் இல்லை.

நமது வேட்பாளர் நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டது முதல் என்னுடன் இருந்து வருகிறார். அவர் யார்? எப்படிப்பட்டவர்? என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அவர் தேர்வு செய்யப்பட்டால் எம்.எல்.ஏ. பணியை சிறப்பாக செய்வார். அசோக் ஆனந்து செய்து வந்த தொகுதி மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து செய்வார்.

இந்த அரசுக்கு மக்களைப்பற்றிய சிந்தனை இல்லை. அதிகார போட்டிதான் உள்ளது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெறுவதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும். கடந்த 3 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒருபைசா கூட முதியோர், உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. தற்போது தொகுதிக்கு 100 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கொடுத்தனர். அதுவும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு எவ்வளவோ கேட்டும் தரவில்லை.

ஆட்சியாளர்கள் அவர்களை மட்டும் பார்த்துக்கொள்கின்றனர். மக்களைப்பற்றி சிந்திப்பதில்லை.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

Next Story