விளையாட்டு, வீர- தீர செயல்களில், சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் - விண்ணப்பிக்க 20-ந்தேதி கடைசி நாள்


விளையாட்டு, வீர- தீர செயல்களில், சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் - விண்ணப்பிக்க 20-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 15 April 2019 10:00 PM GMT (Updated: 15 April 2019 11:06 PM GMT)

விளையாட்டு மற்றும் வீர- தீர செயல்களில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க வருகிற 20-ந்தேதி கடைசி நாளாகும்.

கடலூர்,

மத்திய அரசு, 2019-ம் ஆண்டிற்கான விளையாட்டு, அமைதி, வீர- தீர செயல்கள் போன்ற பாராட்டத்தக்க வகையில் சாதனைப்படைத்ததற்காக பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. இதன்படி மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு விருது, அமைதி வழியில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்திய தலைசிறந்த தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும், 2019-ம் ஆண்டிற்கான தயான்சந்த் விருது விளையாட்டில் சிறப்பான சாதனை படைத்து, தொடர்ந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் வழங்கப்படுகிறது.

அர்ஜூனா விருது, விளையாட்டில் பன்னாட்டு அளவில் கடந்த 3 ஆண்டுகள் சிறப்பான சாதனை படைத்து, தொடர்ந்து விளையாட்டுக்கு தலைமை பொறுப்பேற்று வழிநடத்தும் விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படுகிறது.

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதானது அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டியில் சிறப்பான சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. துரோணாச்சாரியா விருதானது 3 ஆண்டுகள் குறிப்பிடத்தக்க விளையாட்டு சாதனையாளர்களை உருவாக்கிய விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஉறான் புரஸ்கார் விருது, இந்த விருது விளையாட்டின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அசோக் சக்ராவின் கேலன்டரி விருது வீர- தீர செயல் புரிந்தமைக்காக வழங்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள், முழு விவரங்களையும், விண்ணப்பங்களையும் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை)க்குள் கடலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை அணுகலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story