வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் லாரிகளில் ‘ஜி.பி.எஸ்.’ கருவி பொருத்தம்


வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் லாரிகளில் ‘ஜி.பி.எஸ்.’ கருவி பொருத்தம்
x
தினத்தந்தி 16 April 2019 6:11 AM GMT (Updated: 16 April 2019 6:11 AM GMT)

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் லாரிகளில் ‘ஜி.பி.எஸ்.’ கருவி பொருத்தப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 3,227 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. இந்த தேர்தலில் 4,043 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் (பேலட் யூனிட்), 4,043 கட்டுப்பாட்டு கருவிகளும் (கன்ட்ரோல் யூனிட்) மற்றும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 4,172 வி.வி.பேட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் சேமிப்பு கிடங்கில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு அந்த எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் தேர்தலுக்கு முந்தைய நாளான நாளை (புதன்கிழமை) தாலுகா அலுவலகங்களில் இருந்து லாரிகள், மினி லாரிகள் மூலம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட உள்ளது.

இதையொட்டி இந்த மின்னணு வாக்கு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக செல்கிறதா? என்பதை கண்டறிய அந்த வாகனங்கள் அனைத்திலும் ‘ஜி.பி.எஸ்.’ கருவி பொருத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்களை கொண்டு செல்லும் மினி லாரிகளை நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்திற்கு வரவழைத்து அங்கு வைத்து அந்த மினி லாரிகளில் ‘ஜி.பி.எஸ்.’ கருவி பொருத்தப்பட்டது. இந்த பணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குமாரவேல், தாசில்தார் பிரபுவெங்கடேஸ்வரன், மண்டல துணை தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் சாதிக் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இந்த வாகனங்கள் எந்த நேரத்தில் எங்கிருந்து புறப்படுகிறது, இவற்றை கொண்டு செல்பவர்கள் யார்? எந்த வழியாக செல்கிறார்கள், குறித்த நேரத்திற்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்கிறார்களா? என்பதை ‘ஜி.பி.எஸ்.’ கருவியின் மூலம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.

Next Story