“மத்தியில் நல்லாட்சி மலர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம்


“மத்தியில் நல்லாட்சி மலர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம்
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 7:23 PM GMT)

மத்தியில் நல்லாட்சி மலர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தெரிவித்தார்.

வள்ளியூர், 

மத்தியில் நல்லாட்சி மலர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தெரிவித்தார்.

ஞானதிரவியம்

நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று நாங்குநேரி ஒன்றியம், வள்ளியூர், பணகுடி நகர பஞ்சாயத்து பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர் கிருஷ்ணபுதூர், வாகைகுளம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி ஆகிய பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் வேட்பாளர் ஞானதிரவியம் பேசுகையில், ‘மத்தியில் கடந்த 5 ஆண்டு காலமாக தமிழகத்தை வஞ்சித்து கொண்டிருக்கின்ற, தமிழக நலனில் அக்கறை இல்லாத மோடி ஆட்சியை அகற்ற வேண்டும்.

அடிப்படை தேவைகள்

மத்தியில் நல்லாட்சி மலர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத எடப்பாடி அரசை அகற்ற வேண்டும். வெகுவிரைவில் ஸ்டாலின் முதல்வராக வருவார். பின்னர் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி தேர்தல் வரும். அப்போது பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ஊரக வேலை திட்டம் நகர் பகுதிக்கும் விரிவாக்கம் செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மகளிரணி கலா ராஜமணி, வள்ளியூர் நகர செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முத்துராமன், பணகுடி நகர செயலாளர் தமிழ்வாணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் லட்சுமணன், காங்கிரஸ் நகர தலைவர் சீராக் இசக்கியப்பன், வேம்பு சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மோட்டார் சைக்கிள் பேரணி

தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து நேற்று மானூர் யூனியன் பகுதியில் மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, மாவட்ட பிரதிநிதி மைதீன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று மாலை நெல்லை டவுனில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். இதையொட்டி டவுன் வாகையடி முக்கில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்களுடன் வேட்பாளர் ஞானதிரவியம் திறந்த ஜீப்பில் சென்றார். இந்த ஊர்வலம் கீழரதவீதியில் உள்ள தேரடி திடலில் முடிவடைந்தது. இதில் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் ரவீந்திரன், லட்சுமணன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், ம.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான் மைதீன், செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி, மனித நேய மக்கள் கட்சி ரசூல் மைதீன், பிலால் உள்ளிட்டோர் பேசினர்.

Next Story