மோடி வித்தைக்கு இளைஞர்கள் மயங்கிவிடக்கூடாது தஞ்சையில், கி.வீரமணி பேச்சு


மோடி வித்தைக்கு இளைஞர்கள் மயங்கிவிடக்கூடாது தஞ்சையில், கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 7:43 PM GMT)

மோடி வித்தைக்கு இளைஞர்கள் மயங்கிவிடக்கூடாது என தஞ்சையில் கி.வீரமணி கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சை சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற வாகன பேரணி தஞ்சை பள்ளியக்கிரஹாரத்தில் இருந்து நேற்று தொடங்கியது. பல்வேறு இடங்களுக்கு சென்ற இந்த பேரணி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு நிறைவடைந்தது.

நிறைவு பிரசாரத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்தியாவிற்கே முதன்மையாக திகழும் வகையில் ஸ்டாலின் வடிவமைத்துள்ளார். மற்ற மாநிலங்களை விட அதிக அளவில் தமிழகத்தில் தான் அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. நமது மாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக தான் கருணாநிதி அதிக எண்ணிக்கையிலான மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தார்.

ஆனால் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் பாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதால் மருத்துவம் படிக்க முடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு ரத்து என அ.தி.மு.க. கூட்டணியால் சொல்ல முடியுமா? அவர்கள் மத்திய அரசிடம் அடிமையாக இருக்கிறார்கள்.

நுழைவு தேர்வு என்றால் என்ன என்றே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. அதனால் தான் அவர், நீட் தேர்வு கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என பேசுகிறார். நானும் ஒரு விவசாயி என முதல்-அமைச்சர் பேசுகிறார். அந்த விவசாயி தான் விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி அவர்கள் கண்ணீர் சிந்தினாலும் கவலைப்படாமல் 8 வழிச்சாலையை கொண்டு வந்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் கூட மோடி தெரிவிக்கவில்லை. அவர் இன்றைக்கு தேர்தலுக்காக தமிழகத்தை நாடி வருகிறார். கடந்த முறை கூறிய எதையும் மோடி நிறைவேற்றவில்லை. அதனால் முதல் தலைமுறை இளைஞர்கள் மோடியின் வித்தையில் மயங்கிவிடக்கூடாது.

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும். மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. தோல்வி பயத்தால் அவர்கள் எதையும் செய்வார்கள். நாம் நோட்டுக்கு அடிபணியாமல் அதையும் தாண்டி உதயசூரியனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story