கோரேகாவில் கல்லூரி மாணவர் அடித்து கொலை 2 பள்ளி மாணவர்கள் கைது


கோரேகாவில் கல்லூரி மாணவர் அடித்து கொலை 2 பள்ளி மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 10:17 PM GMT)

கோரேகாவில் கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்த 2 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

கோரேகாவில் கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்த 2 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்விரோதம்

மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் குலாம்சிங் குசாய் (வயது18). கல்லூரி மாணவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 மற்றும் 16 வயதான 2 பள்ளி மாணவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில், சம்பவத்தன்று குலாம்சிங் குசாய் பால் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் பள்ளி மாணவர்கள் 2 பேரும் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும், ஏன் எங்களை முறைத்து பார்க்கிறாய்? என கூறி குலாம்சிங் குசாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அடித்து கொலை

இந்த தகராறு கைகலப்பானது. இதில், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் குலாம்சிங் குசாயை கீழே தள்ளி முகத்தில் மிதித்து சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது தலையை கல்லில் மோத செய்தனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார்.

இதையடுத்து பள்ளி மாணவர்கள் இருவரும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த குலாம்சிங் குசாயை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குரார் போலீசார் கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்த 2 பள்ளி மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story