சிவகாசி அருகே கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு பெண் படுகொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்


சிவகாசி அருகே கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு பெண் படுகொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 16 April 2019 11:04 PM GMT (Updated: 16 April 2019 11:04 PM GMT)

சிவகாசி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணின் தலையில் கியாஸ் சிலிண்டரை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தங்கல்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது, விஜயகரிசல்குளம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48), பட்டாசு தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தா (40). இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் மனைவியின் நடத்தையில் நாகராஜ் சந்தேகமடைந்து, அதனாலேயே தினசரி மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சாந்தாவை, நாகராஜ் தாக்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்களது குடும்பம் அருகில் உள்ள சுக்ரவார்பட்டிக்கு குடிபெயர்ந்தனர். அங்கும் அவர்கள் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்றிரவு நாகராஜ் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை சாந்தா கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நாகராஜ் வீட்டினுள் இருந்த கியாஸ் சிலிண்டரை எடுத்து மனைவி என்று பாராமல் சாந்தா தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

கியாஸ் சிலிண்டரை மனைவி தலையில் போட்டு கணவரே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story