சென்னை விமான நிலையத்தில் ரூ.13½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.13½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 5:32 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.13½ லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் சுற்றுலா விசாவில் துபாய் சென்று திரும்பிய ராமநாதபுரத்தை சேர்ந்த நிசார்(வயது 22) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

இதையடுத்து அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 410 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த தங்கத்தை யாருக்காக துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? என பிடிபட்ட நிசாரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story