தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடக்கம் 37 பேர் களத்தில் உள்ளனர்


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடக்கம் 37 பேர் களத்தில் உள்ளனர்
x
தினத்தந்தி 17 April 2019 9:30 PM GMT (Updated: 17 April 2019 8:24 PM GMT)

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 37 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

தூத்துக்குடி தொகுதியில் 7 லட்சத்து 373 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 24 ஆயிரத்து 912 பெண் வாக்காளர்கள், 116 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 401 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் 1,595 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் மிகவும் பதற்றமான 3 வாக்குச்சாவடிகளும், பதற்றமான 238 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 694 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் வாக்குச்சாவடியில் நடைபெறும் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட முடியும்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் 5 மாதிரி வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 30 மாதிரி வாக்குச்சாவடிகளும், தொகுதிக்கு ஒரு பெண் மட்டுமே பணியாற்றும் பெண்களுக்கான வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பணியாளர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நேற்று இறுதிகட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.

இதே போன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 8 ஆயிரத்து 51 ஆண்கள், 2 ஆயிரத்து 436 பெண்கள் ஆக மொத்தம் 8 ஆயிரத்து 487 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு நேற்று காலையில் உதவி தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பணி ஆணை வழங்கப்பட்டன. தொடர்ந்து பணியாளர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

தூத்துக்குடி தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவுக்கான பொருட்களை கொண்டு செல்வதற்காக 136 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் நேற்று அந்தந்த சட்டமன்ற தொகுதியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு பொருட்களை கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொருட்கள் தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன் முன்னிலையில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் வாக்குப்பதிவு எந்திரம், சீல்கள் உள்ளிட்ட 19 பொருட்கள், 13 வகையான படிவங்கள், 25 வகையான கவர்கள், 6 வகை போர்டுகள், பேனா, பென்சில், மை, மெழுகுவர்த்தி உள்ளிட்ட 19 பொருட்கள் உள்பட மொத்தம் 107 வகையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனியான சாக்குபையில் போட்டு வைக்கப்பட்டு இருந்தது. இந்த பொருட்கள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டன. தூத்துக்குடி தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 3 வாக்குச்சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தலா 1595 வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் எந்திரமும், 4 ஆயிரத்து 785 வாக்குச்சீட்டு பொருத்தும் எந்திரமும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீசார் 2 ஆயிரத்து 500 பேர், முன்னாள் ராணுவத்தினர் 300 பேர், ஊர்க்காவல் படையினர் 200 பேர், ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் 30 பேர் மற்றும் மராட்டிய மாநில சிறப்பு போலீஸ் படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உள்பட மொத்தம் சுமார் 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கிறது. தொடர்ந்து 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. தொடர்ந்து மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த தேர்தல்களில் ஒவ்வொரு மணி நேரமும் பதிவான வாக்கு விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர் எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் அதிகாரிக்கு தெரிவித்து வந்தார். இந்த தேர்தலில் அதற்கென பிரத்யேகமாக ஒரு செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் வாக்குப்பதிவு விவரங்களை தெரிவித்தால் உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தலை கண்காணிக்க சீமா சர்மாஜெயின், துக்கிசியாம் பெய்க் ஆகிய பொது தேர்தல் பார்வையாளர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளராக மாதவி லதா மற்றும் போலீஸ் தேர்தல் பார்வையாளராக சீனிவாசலு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று வேட்பாளர்கள் செலவு கணக்குகளை கண்காணிக்க 2 பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி தலைமையில் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் போலீசார், பணியாளர்கள் உள்பட மொத்தம் சுமார் 16 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story