விருத்தாசலம் அருகே, ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - குடும்பத்தினர் எதிர்ப்பால் விபரீத முடிவு


விருத்தாசலம் அருகே, ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - குடும்பத்தினர் எதிர்ப்பால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 10:16 PM GMT)

விருத்தாசலம் அருகே கள்ளக்காதல் ஜோடிக்கு அவர்களது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ரெயில் முன் பாய்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தில் விருத்தாசலம்-சேலம் ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 35 வயதுடைய ஆண், 25 வயதுடைய பெண் ஒருவரும் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் தண்டவாளத்தின் அருகில் மோட்டார் சைக்கிள், விஷ பாட்டில் மற்றும் செருப்புகள் கிடந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இதுபற்றி விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரமேஷ்(வயது 38), பெண்ணாடம் பொன்னேரியை சேர்ந்த திருமூர்த்தி மனைவி காயத்ரி (25) என்பது தெரியவந்தது. கூலித்தொழிலாளியான ரமேசுக்கு, லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அதேபோல் காயத்ரிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். திருமூர்த்தி வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

ரமேசும், காயத்ரியும் விருத்தாசலத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இவர்களது நெருக்கமான பழக்கம், ரமேசின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் ரமேசும், காயத்ரியும் திடீரென மாயமாகினர். இதையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தான் கள்ளக்காதலர்கள் 2 பேரும் தொட்டிக்குப்பம் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்காதலுக்கு வந்த எதிர்ப்பின் காரணமாக, ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதற்கு மனமின்றி, அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் இதுபற்றி இருவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்த்து கறி அழுதனர். பின்னர் ரமேஷ், காயத்ரியின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தண்டவாள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் விஷ பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

அவர்கள் விஷம் குடித்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story