மதுரை வழியாக செல்லும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - கூட்ட நெரிசலை சமாளிக்க நடவடிக்கை


மதுரை வழியாக செல்லும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - கூட்ட நெரிசலை சமாளிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 17 April 2019 10:15 PM GMT (Updated: 17 April 2019 11:06 PM GMT)

கோடை விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் மதுரை வழியாக இயக்கப்படும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மதுரை,

கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை வழியாக செல்லும் சிறப்பு ரெயில்கள் மற்றும் ஒரு சில ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம்-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.12689/12690) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 31-ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில்களில் ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

தாம்பரம்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.22657/22658) ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, மே மாதம் 31-ந் தேதி இரு மார்க்கங்களிலும் இணைக்கப்படுகிறது.

ராமேசுவரம்-திருப்பதி வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.16779/16780) இன்று (வியாழக்கிழமை) முதல் மே மாதம் 30-ந் தேதி வரை ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.22621/22622) வருகிற 20-ந் தேதி முதல் மே மாதம் 30-ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2-ம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகள்-4 இரு மார்க்கங்களிலும் இணைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story