முதல் முறையாக கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் வாக்குப்பதிவு 156 பேர் ஓட்டு போட்டனர்


முதல் முறையாக கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் வாக்குப்பதிவு 156 பேர் ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 18 April 2019 10:15 PM GMT (Updated: 18 April 2019 5:18 PM GMT)

தமிழகத்தில் முதல் முறையாக கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 156 பேர் ஓட்டு போட்டனர்.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் புதிய முயற்சியாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அங்கு சிகிச்சை பெற்று வரும் 156 பேர், காப்பகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நடைபெற்றபோது பெருநகர சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் லலிதா அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கு சிகிச்சையில் உள்ளவர்களும் சராசரி மனிதர்களை போன்றவர்கள் தான். இவர்களுக்கு வாக்களிக்க உரிமைகள் உண்டு. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் முதல் முறையாக இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் தேர்தலில் இவர்கள் வாக்களிக்க இங்கு சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காப்பகத்தில் உள்ளவர்களை மொத்தமாக அழைத்து வராமல், 6 பேர் கொண்ட குழுவாக காப்பக ஊழியர்கள் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக இயக்குனர் பூரணசந்த்ரிகா கூறியதாவது:-

இந்த காப்பகத்தில் உள்ள 900 நபர்களில், முடிவெடுக்கும் திறமை உள்ளவர்களை தனி தேர்வுகள் மூலம் கண்டறிந்தோம். அதில் 103 ஆண்கள் மற்றும் 56 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு 2 நாட்கள் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. வாக்களிக்கும் கடைசி நேரத்தில் 3 பேர் வாக்களிக்க மறுத்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

அங்கு வாக்களித்தோரில், 1 பேராசிரியர், 3 என்ஜினீயர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story