ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை போலீசார் விசாரணை


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 April 2019 10:30 PM GMT (Updated: 19 April 2019 5:09 PM GMT)

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கோடை விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் முதலை பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது முதலை பண்ணை பகுதியில் காவிரி ஆற்றில் பெண் ஒருவரின் பிணம் கரை ஒதுக்கியது. இதனால் ஆற்றில் குளித்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெரும்பாலையை சேர்ந்த சுப்பராயன் முதலியார் மனைவி இந்திராணி(வயது70) என்பதும் கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதும், 3 மகன்கள், 5 மகள்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் ஒகேனக்கல்லுக்கு விரைந்து வந்து உடலை அடையாளம் காட்டினர். அப்போது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததும், நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலை வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்து விட்டு இந்திராணி ஒகேனக்கல்லுக்கு வந்து காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 

 இதையடுத்து போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story