மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை


மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 20 April 2019 11:15 PM GMT (Updated: 20 April 2019 5:51 PM GMT)

மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் அரிவாளால் வெட்டிக்கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 58). இவர், நீடூர் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவரது மகன்கள் இளவரசன்(36), இளையராஜா(32), எழிலரசன்(27). அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன்மகன்கள் வேல்முருகன், திருமுருகன், வினோத், விக்னேஷ்.

இளங்கோவன் குடும்பத்திற்கும், கண்ணதாசன் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன்விரோதம் தொடர்பாக கடந்த மாதம் 18-ந் தேதி அன்று பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் மறுநாள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பையும் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு நடந்தது. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இளங்கோவன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நீடூர் கீழத்தெரு மாரியம்மன் கோவில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கண்ணதாசன், அவரது மகன் வேல்முருகன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், இளங்கோவன் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது கண்ணதாசன் தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் இளங்கோவன் தரப்பினரை வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத அவர்கள் உயிர் தப்பிக்க அங்கிருந்து ஓடினார்கள். ஆனாலும் கண்ணதாசன் தரப்பினர், இளங்கோவன் தரப்பினரை ஓட, ஓட விரட்டி வெட்டினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் நீடூர் கீழத்தெருவை சேர்ந்த தங்கமணி(32), இளங்கோவன் மகன்கள் இளவரசன், எழிலரசன், இளையராஜா மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பாலு, சம்மந்தம், பிரபாகரன், பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தங்கமணி, இளவரசன் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து இளங்கோவன் மகன் எழிலரசன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக கண்ணதாசன் மகன்கள் திருமுருகன்(32), வினோத்(24), அரிவளூர் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மான்சிங் என்கிற ராஜாமான்சிங்(29), நீடூர் கீழத்தெருவை சேர்ந்த கஜேந்திரன்(58) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கண்ணதாசன், சேட்டு என்கிற முருகையன், வேல்முருகன், விக்னேஷ், கபில், கோபி, நவீன்ராஜ், கிஷ்வர் மற்றும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்விரோதத்தில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story