தஞ்சை மாவட்டத்தில் மோடி கல்வெட்டு கண்டெடுப்பு


தஞ்சை மாவட்டத்தில் மோடி கல்வெட்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 20 April 2019 10:45 PM GMT (Updated: 20 April 2019 7:06 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் மோடி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் கிராமம். பேராவூரணி-அத்தாணி-கட்டுமாவடி வழித்தடத்தில் பேராவூரணியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள சிவாலயத்தினை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு புதையுண்டு கிடந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து அந்த ஊரை சேர்ந்த சண்முகநாதன் என்பவர், தஞ்சை சரசுவதி மகால் நூலக தமிழ் பண்டிதரும், தொல்லியல் ஆய்வாளருமான மணிமாறனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் மணிமாறன் மற்றும் பேராசிரியர்கள் ஜம்புலிங்கம், தில்லைகோவிந்தராஜன், ராமமூர்த்தி ஆகியோர் அந்த கிராமத்திற்கு சென்று அந்த கல்வெட்டினை ஆய்வு செய்தனர்.

பின்னர் இது குறித்து மணிமாறன் கூறுகையில், பெருமகளூரில் உள்ள சோமநாதர் கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதும் குலோத்துங்க சோழனாலும், பாண்டிய மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டதை அறியமுடிகிறது. தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னனான பிரதாபசிம்மன் காலத்தில் கொடை அளிக்கப்பெற்ற செய்தியினைக்கூறும் மராத்தி மொழி மற்றும் மோடி எழுத்திலமைந்த கல்வெட்டே தற்போது புதிதாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் சோழர் காலக்கோவில் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அக்கோவிலுக்கு நேர் எதிராக காவிரி குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றபோது நடராஜர், விநாயகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் புதையுண்டிருந்து கண்டெடுக்கப்பட்டது. இவை தற்போது தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சோழ நாட்டில் முதலாம் ராஜராஜனால் உருவாக்கப்பெற்ற வளநாடுகள் பலவற்றை முதலாம் ராஜேந்திரசோழன் மேலும் பல வளநாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரித்தான். அவற்றுள் பாண்டிய குலாசனி வளநாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பெற்ற ஜெயசிங்க குலகால வளநாட்டில் அடங்கிய ஒரு பேரூரே பெருமுள்ளூர் என்னும் ஊராகும். அன்று பெருமுள்ளூர் என்றழைக்கப்பட்ட இவ்வூர் பெயர் மருவி இன்று பெருமகளூர் என்று அழைக்கப்படுகிறது.

வரலாற்றில் இவ்வூர், பெருமுள்ளூரான குலோத்துங்க சோழ சதுர்வேதிமங்கலம் எனக்குறிப்பிடப்படுகிறது. குலோத்துங்கசோழன் காலத்திற்கு (கி.பி.1070-1125) முன்னதாகவே ராஜராஜனால் இந்த சிவாலயம் எழுப்பப்பெற்றிருக்கவேண்டும். நம் வரலாற்றில் பல்வேறு சான்றுகள் மறைந்தும் புதைந்தும் கிடப்பதால் பல செய்திகளை வெளியுலகு அறிய இயலாமல் போய்விடுகிறது. இந்த கோவிலோடு இணைந்து திகழும் பெருங் குளமான தாமரைக்குளத்தின் நீர் வெளியேறும் அமைப்பும், கட்டுமானமும் ராஜராஜன் காலத்து பாணியை காட்டுகின்றன.

பாண்டிய மன்னர்களால் இவ்வூரும், இங்கு திகழும் கோவில்களும் போற்றப்பெற்றுள்ளன. பாண்டிய நாட்டின் எல்லையான வெள்ளாற்றின் அருகே இவ்வூர் அமைந்துள்ளதே இதற்கு காரணம் ஆகும். இங்கு கிடைத்த கல்வெட்டில், காலத்தால் முந்தையது குலோத்துங்க சோழனின் கல்வெட்டாகும். பல்வேறு காரணங்களால் பிற கல்வெட்டுகள் காலப்போக்கில் அழிந்துள்ளன.

இங்கு புதிதாகக் கண்டறியப்பட்ட மராத்திய மொழியின் ஒரு வடிவமான மோடி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னன் பிரதாம சிம்மன் (கி.பி.1739-1763) காலத்தில் வெட்டப்பட்டதாகும். இக்கல்வெட்டு வெட்டப்பெற்ற ஆங்கில ஆண்டு கி.பி.1753 ஆகும். இக்கல்வெட்டுச் சாசனத்தில் செப்பேடு மற்றும் ஓலைச்சுவடிகளில் காணப்படுவதுபோன்று முத்திரை இடப்பட்டுள்ளது சிறப்பானதாகும்.

மேலும், சூரிய, சந்திரனைக் குறிப்பிடும் வட்டமும் பிறையும் வெட்டப்பட்டுள்ளது. மராத்தி மோடி எழுத்துக்கள் கலந்து காணப்படும் இக்கல்வெட்டு பிரதாபசிம்மன் பெருமுள்ளூர் சிவாலயத்திற்கு வழங்கிய கொடையினை விவரிக்கிறது. கிட்டத்தட்ட 5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட கல்வெட்டின் பக்கவாட்டில் இதே செய்தி, தமிழிலும் வெட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ப்பகுதி மிகவும் சிதைவுற்று இருப்பதால் படித்தறிய முடியாத நிலையில் உள்ளது. தமிழகத்தில் சோழர் காலத்துக்கோவிலில் கிடைத்துள்ள மராத்தி மொழி மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு இதுவேயாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story