நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் தீக்குளித்த 2 பெண்கள் சாவு


நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் தீக்குளித்த 2 பெண்கள் சாவு
x
தினத்தந்தி 20 April 2019 9:15 PM GMT (Updated: 20 April 2019 7:41 PM GMT)

நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் தீக்குளித்த 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

நெல்லை,

நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் தீக்குளித்த 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

இளம்பெண் தற்கொலை

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ஜோதி (வயது 20). இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவர், தனது அண்ணன் பூ வியாபாரி கருப்பசாமியின் பராமரிப்பில் இருந்து வந்தார். ஜோதி ஒரு கடையில் வேலை செய்து வந்தார். அவர் தனது அண்ணன் கருப்பசாமியிடம் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி தருமாறு கேட்டார். அவர் தற்போது பணம் இல்லை. விரைவில் வாங்கி தருவதாக கூறினார்.

இதனால் மனம் உடைந்த ஜோதி கடந்த 15-ந் தேதி வீட்டில் வைத்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஜோதி உடலில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேர்மன் மனைவி தங்கம் (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சேர்மன் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சேர்மன் மாமியார் வீட்டு அருகே திம்மராஜபுரத்தில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கினார். அந்த வீட்டில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட பின், தங்கம் வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தனது கணவர் சேர்மனிடம் கூறி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தங்கம் திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தங்கம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story