குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம்


குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 20 April 2019 11:00 PM GMT (Updated: 20 April 2019 7:56 PM GMT)

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி,

கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வந்தனர்.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திருச்சியில் உள்ள அதிகாரிகள் தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவற்றின் பயன்பாடு திருச்சி மாநகரில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

இதுபற்றி நேற்றைய ‘தினத்தந்தி’ நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திருச்சி மாநகரில் உள்ள சில கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் குணசேகரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் டேவிட்முத்துராஜ், திருப்பதி ஆகியோர் கொண்ட குழுவினர் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட 18-வது வார்டில் நரசிம்மலுநாயுடு தெருவில் ஒரு குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பைகள், டம்ளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு சாக்கு மூட்டைகளிலும், அட்டை பெட்டிகளிலும் பண்டல், பண்டலாக வைக்கப்பட்டிருந்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குடோனில் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து இருந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோல் தொடர்ந்து அவ்வப்போது சோதனை நடத்தப்படும் என்றும், பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கும்படியும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அரசின் உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் அவற்றை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Next Story