மணப்பாக்கத்தில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி 3 பேர் பலி பஸ்சுக்காக காத்திருந்த போது பரிதாபம்


மணப்பாக்கத்தில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி 3 பேர் பலி பஸ்சுக்காக காத்திருந்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 21 April 2019 10:30 PM GMT (Updated: 21 April 2019 4:40 PM GMT)

மணப்பாக்கத்தில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி, வெளியூர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்த 3 பேர் பலியானார்கள்.

ஆலந்தூர்,

சென்னை கிண்டியில் இருந்து போரூர் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி-மவுண்ட் சாலையில் மணப்பாக்கத்தில் மின்னல் வேகத்தில் சென்ற லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

அப்போது அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் வெளியூர் செல்வதற்காக பஸ்சுக்காக 3 பேர் காத்திருந்தனர். தறிகெட்டு ஓடிய லாரி, 3 பேர் மீதும் மோதியதுடன், பஸ் நிறுத்த நிழற்குடையில் மோதி நின்றது. நிழற்குடை நொறுங்கியது.

இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பலியானவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி (வயது 25), சிவக்குமார் (25) மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (32) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் ராமா புரத்தில் உள்ள பேக்கிரியில் வேலை செய்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பஸ்சுக்காக காத்திருந்தபோது தறிகெட்டு ஓடிய லாரி மோதி பலியானது தெரிந்தது.

லாரி மோதியதில் பஸ் நிறுத்தம் அருகில் இருந்த இளநீர் வாகனம் சேதமடைந்ததுடன், அருகில் உள்ள தனியார் நிறுவன தடுப்பு சுவரும் சேதமடைந்தது. தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story