நெல்லையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


நெல்லையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 21 April 2019 10:30 PM GMT (Updated: 21 April 2019 6:43 PM GMT)

நெல்லையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.

நெல்லை, 

நெல்லையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.

போலீஸ்காரர் மனைவி

நெல்லை வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). இவர் கடந்த 2016-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். தற்போது மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் மகள் ஜெயசூர்யா (22) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர் பி.காம். பட்டதாரி.

திருமணம் முடிந்ததும் கணவன், மனைவி இருவரும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள முத்துக்குமாரின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் முத்துக்குமார் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக கேரள மாநிலத்திற்கு சென்று விட்டார்.

தற்கொலை

நேற்று முன்தினம் இரவு ஜெயசூர்யா தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜெயசூர்யாவின் மாமியார் கதவை தட்டியுள்ளார். ஆனால் ஜெயசூர்யாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. உடனே ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது அங்கு ஜெயசூர்யா தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று ஜெயசூர்யாவின் உடலை மீட்டனர். போலீஸ் விசாரணையில், ஜெயசூர்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே ஜெயசூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முத்துக்குமார் வீட்டுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், “ஜெயசூர்யா சாவில் சந்தேகம் இருக்கிறது. அவர் நேற்று முன்தினம் இரவு பெற்றோரிடம் செல்போனில் பேசினார். எப்படி திடீரென்று தற்கொலை செய்து இருக்க முடியும். இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்“ என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் ஜெயசூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுபற்றிய புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமார் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 மாதத்தில் ஜெயசூர்யா தற்கொலை செய்து கொண்டதால் நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே விசாரணை நடத்த உள்ளார். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story