சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி புனே அருகே பரிதாபம்


சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி புனே அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 21 April 2019 9:54 PM GMT)

புனே அருகே சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

புனே,

புனே அருகே சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார் மோதி விபத்து

நாந்தெட்டை சேர்ந்தவர் கிஷோர். இவர் புனேவிற்கு செல்ல தனது குடும்பத்துடன் காரில் அகமது நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். காரில் அவரது மனைவி சுபம், மகள் புஷ்பா, மகன் விமல் மற்றும் பெற்றோர் இருந்தனர்.

புனே-அகமதுநகர் நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணி அளவில் தக்ரி கிராமம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை ஓரமாக ஒரு கன்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. இதை கிஷோர் கவனிக்கவில்லை. இதில் வேகமாக வந்த கார் கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

4 பேர் பலி

இந்த விபத்தில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கி கிஷோர், சுபம், விமல் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். புஷ்பா உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story