ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 22 April 2019 10:15 PM GMT (Updated: 22 April 2019 7:09 PM GMT)

ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊத்தங்கரை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ளது நார்சாம்பட்டி கிராமம். இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் இருந்த ஆழ்துளை குழாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதாகிவிட்டது. பின்னர் அதே பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி அதன் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. மக்கள் தண்ணீருக்காக அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று வரவேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக மாவட்டம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சிலர் நேற்று காலிக்குடங்களுடன் சிங்காரப்பேட்டை-திருப்பத்தூர் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்மோட்டாரை சரிசெய்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story