புளியங்குடி அருகே பஸ்-கார் மோதல்; வாலிபர் சாவு


புளியங்குடி அருகே பஸ்-கார் மோதல்; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 22 April 2019 9:45 PM GMT (Updated: 22 April 2019 8:27 PM GMT)

புளியங்குடி அருகே பஸ்-கார் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

புளியங்குடி,

நெல்லை மாவட்டம் புளியங்குடி காலாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்தினகரன் (வயது 32). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. காலாடி நடுத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (45). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இவர்கள் பால்தினகரனின் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். காரை பால்தினகரன் ஓட்டினார். புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு தனியார் கல்லூரி பஸ்சும், காரும் மோதிக் கொண்டன.

இதில் காரில் இருந்த பால்தினகரன் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பால்தினகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கருப்பசாமியும், கணேசனும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கணேசனை மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story