திருவள்ளூர் அருகே பஸ் மோதி நகராட்சி துப்புரவு ஊழியர் பலி


திருவள்ளூர் அருகே பஸ் மோதி நகராட்சி துப்புரவு ஊழியர் பலி
x
தினத்தந்தி 22 April 2019 9:45 PM GMT (Updated: 22 April 2019 9:06 PM GMT)

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி நகராட்சி துப்புரவு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வேப்பஞ்செட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). ஆவடி நகராட்சியில் ஒப்பந்த முறையில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரேணுகா(40) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சேகர் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் கடம்பத்தூருக்கு வந்தார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு தனது வீடு நோக்கி புறப்பட்டு சென்றார்.

அகரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே திருவள்ளூரில் இருந்து சேரம்பாக்கம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சேகருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைக்கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த சேகரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் சேகர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story