சென்னிமலை அருகே கார் –மொபட் மோதல்; விவசாயிகள் 2 பேர் சாவு


சென்னிமலை அருகே கார் –மொபட் மோதல்; விவசாயிகள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 23 April 2019 9:45 PM GMT (Updated: 23 April 2019 6:43 PM GMT)

சென்னிமலை அருகே காரும், மொபட்டும் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள புலவனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவருடைய மனைவி கண்ணம்மாள் (50). இவர்களுக்கு ஆனந்தி என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அதேப்பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவருடைய மனைவி ஜெயலட்சுமி (50). இவர்களுக்கு சுசீலா என்ற மகளும், தேவேந்திரன் என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்கும் திருமணம் ஆகி அந்தப்பகுதியில் தங்களுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள்.

சுப்பிரமணியும், பழனிச்சாமியும் விவசாயிகள். இந்தநிலையில் நேற்று மாலை இவர்கள் 2 பேரும் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்ட வாழைக்காய்களை வெட்டி விற்பனைக்காக ஈங்கூருக்கு மொபட்டில் கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து வாழைக்காயை விற்பனை செய்துவிட்டு மீண்டும் சுப்பிரமணியும், பழனிச்சாமியும் புலவனூர் நோக்கி மொபட்டில் நேற்று மாலை 3 மணி அளவில் வந்துகொண்டு இருந்தனர். மொபட்டை சுப்பிரமணி ஓட்டினார். பழனிச்சாமி பின்னால் உட்கார்ந்து இருந்தார். மொபட் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது எதிரே வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பழனிச்சாமிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, படுகாயம் அடைந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் கொண்டு செல்லும் வழியிலேயே பழனிச்சாமியும் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து விபத்தில் இறந்த சுப்பிரமணி மற்றும் பழனிச்சாமியின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணியின் உடல்களை பார்த்து அவர்களுடைய உறவினர்கள் கதறி அழுதது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.


Next Story