சென்னை ஐ.ஐ.டி.யின் வைரவிழா கொண்டாட்டம் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு


சென்னை ஐ.ஐ.டி.யின் வைரவிழா கொண்டாட்டம் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 April 2019 10:00 PM GMT (Updated: 24 April 2019 8:47 PM GMT)

சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் 60-வது ஆண்டு தினம் வைர விழாவாக கொண்டாடப்பட்டது.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. 1959-ம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனமாக நிறுவப்பட்டது. இதில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தொடர்பான 16 கல்வி துறைகள் இருக்கின்றன. 580-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் 9 ஆயிரத்து 500 மாணவ-மாணவிகள் இருக்கின்றனர்.

இந்த கல்வி நிறுவனத்தின் 60-வது ஆண்டு தினம் வைர விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவரும், தனியார் நிறுவனத்தின் நிறுவனருமான வி.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதேபோல், கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் வைரவிழா கொண்டாட்டத்தில் பங்கு பெற்றனர். விழாவில் ஆராய்ச்சிகளில் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2 பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விருது வழங்கப்பட்டது.

4 இளம் ஆசிரியர்களுக்கும், 2 பேராசிரியர்களுக்கும் ரூ.25 லட்சம் மற்றும் ரூ.40 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

முந்தைய ஆண்டின் நடவடிக்கை தொடர்பான தொகுப்புகள் மற்றும் செய்திகளை உள்ளடக்கிய ‘கூடுதல் சித்திர சொற்பொழிவு’ என்ற தலைப்பில் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.

Next Story