ஊட்டியில் கோடை சீசனையொட்டி, போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


ஊட்டியில் கோடை சீசனையொட்டி, போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 25 April 2019 10:30 PM GMT (Updated: 25 April 2019 7:03 PM GMT)

ஊட்டியில் கோடை சீசனையொட்டி போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆய்வு செய்தார்.

ஊட்டி,

மலைகளின் அரசியான ஊட்டியில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. அடுத்த மாதம்(மே) 1-ந் தேதி தொழிலாளர்கள் தினம் என்பதால் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருவார்கள். சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சாலையில் நடந்து செல்வதை தவிர்க்க நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை, ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் ஊட்டியில் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது வாகன நிறுத்துமிடங்களான என்.சி.எம்.எஸ்., அசெம்பிளி தியேட்டர் வளாகம், பிரிக்ஸ், ஆவின், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தை பார்வையிட்டனர்.

இங்கு சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் உள்ளதா?, வாகனங்கள் சென்று வர ஏதேனும் இடையூறு ஏற்படுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா செல்வதற்கு நகர அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக வரும் வாகனங்களை பிங்கர்போஸ்ட், காந்தல் பகுதியில் நிறுத்துவது, கோத்தகிரி வழியாக வரும் வாகனங்களை ஓல்டு ஊட்டி பகுதியில் நிறுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தாவரவியல் பூங்கா எதிரே நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் இடையூறு குறித்து போலீஸ் அதிகாரிகள் கேட்டறிந்தனர். தாவரவியல் பூங்காவுக்கு செல்லும் வாகனங்கள் ஆட்லி சாலை வழியாக மற்ற இடங்களுக்கு செல்லலாம். எக்காரணத்தை கொண்டும் மீண்டும் தாவரவியல் பூங்கா சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதேபோன்று கோத்தகிரியில் கோட்டாஹால் சாலை, ராம்சந்த் சதுக்கம், மார்க்கெட் திடல், ஜீப் ஸ்டேண்ட் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினார். அப்போது ராம்சந்த் சதுக்கத்தில் செயல்பட்டு வரும் மதுபாருக்கு வருபவர்கள் பொதுமக்களிடம் குடிபோதையில் தகராறு செய்வதாக புகார் கூறப்பட்டது. பின்னர் அங்கு சென்ற போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா மதுபாருக்கான அனுமதி சான்றை மேலாளரிடம் வாங்கி ஆய்வு செய்தார். மேலும் இதுபோன்ற புகார்கள் மேலும் வந்தால் பார் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Next Story