ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆபத்தான பகுதிகளில் குளிப்பதை தடுக்க தானியங்கி எச்சரிக்கை கருவி போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தகவல்


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆபத்தான பகுதிகளில் குளிப்பதை தடுக்க தானியங்கி எச்சரிக்கை கருவி போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தகவல்
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 25 April 2019 7:48 PM GMT)

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆபத்தான பகுதிகளில் குளிப்பதை தடுக்க தானியங்கி குரல் எழுப்பும் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தெரிவித்தார்.

தர்மபுரி, 

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல், காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழையும் இடமாக திகழ்கிறது. கோடைவிடுமுறை தொடங்கி உள்ள நிலையில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் குளிப்போரின் பாதுகாப்பு, பரிசலில் செல்வோரின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிபடுத்த காவல்துறை மூலம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கூறியதாவது:- ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்கிறார்கள். இங்கு ஆபத்தான இடங்கள், சுழல் உள்ள இடங்கள் குறித்து ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் ஆர்வ மிகுதியால் அந்த பகுதிகளில் குளிக்கும் இளைஞர்களில் சிலர் ஆற்றில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் வேதனைக்கு உள்ளாக்குகின்றன. இத்தகைய உயிரிழப்புகளை முழுமையாக தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் மின்சாரம் அல்லது சூரிய மின்சக்தி மூலம் செயல்படும் தானியங்கி குரல்வழி எச்சரிக்கை கருவிகளை(ஆட்டோமெட்டிக் ஆடியோ அலார்ட் சிஸ்டம்) பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் ஆற்றின் ஆபத்தான தன்மை குறித்து விளக்கும் வகையில் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் குரல்களை பதிவு செய்து சீரான இடைவெளியில் அவற்றை தொடர்ந்து ஒலிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த எச்சரிக்கை ஒலிபரப்பை கேட்பதன் மூலம் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து அத்தகைய பகுதிகளில் குளிப்பதை தவிர்த்து கொள்ள முடியும். அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதை உறுதிசெய்ய முடியும். ஏற்கனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நடந்த விபத்து சம்பவங்களை சுட்டிக்காட்டி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பேனர்களையும் ஆங்காங்கே வைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story