முத்தூர் அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளுடன் பாய்ந்த வெள்ளம் விளை நிலங்கள் பாதிப்பு


முத்தூர் அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளுடன் பாய்ந்த வெள்ளம் விளை நிலங்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 25 April 2019 10:11 PM GMT)

முத்தூர் அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளுடன் வெள்ளம் பாய்ந்தது. இதனால் விளை நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.

முத்தூர்,

கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆறு திருப்பூர் வழியாக வந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்து சேருகிறது. அங்கிருந்து வரும் நொய்யல் ஆற்று நீர் திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லை வழியாக கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது.

கடந்த காலங்களில் நொய்யல் ஆறு என்று கூறினாலே சாயக்கழிவு ஆறு என்று கூறும் அளவிற்கு இந்த ஆற்றில் செல்லும் நீரில் ஏராளமான சாயக்கழிவுகள் கலந்து சென்றன. இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் உள்ள விவசாயிகளின் விளை நிலங்கள் மற்றும் நகர கிராமப்பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், ஓடைகள், ஏரிகள் உட்பட நீர் நிலைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த நொய்யல் பாசன விவசாயிகள் திருப்பூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த சாயத்தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்றும், சாயக்கழிவு நீரினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் விளை நிலங்களுக்கு நஷ்ட ஈட்டுத்தொகை வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் செயல்பட்டு வந்த அனைத்து சாய தொழிற்சாலைகளிலும் சுத்திகரிப்பு கருவி பொருத்தி சாயக்கழிவுகளை நன்கு சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படாத சாயத்தொழிற்சாலைகளை சீல் வைத்து மூட வேண்டும் என்றும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழக அரசு, மாவட்ட நிர்வாக அறிவுத்தலின் படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக திருப்பூர் சாயத்தொழிற்சாலைகளில் கடந்த 6 ஆண்டுகளாக அவ்வப்போது அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி இந்த நேரடி ஆய்வின் முடிவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் திருப்பூர் மாநகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாயக்கழிவு வெளியேற்றும் சுத்திகரிப்பு கருவி பொருத்தாத ஏராளமான சாயத்தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதித்தும், சீல் வைத்து மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

மேலும் நொய்யல் ஆற்றில் மழை நீர் வெள்ளப்பெருக்கு அதிக அளவு இருக்கும் காலங்களில் நொய்யல் ஆற்றில் செல்லும் சாயக்கழிவுகள் மழை நீரில் அடித்து செல்லப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நொய்யல் ஆற்றின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான கோவை, திருப்பூர் மாவட்ட மைய பகுதிகளில் கடந்த வாரம் கோடை மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் மழை நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறி வருகிறது. இதனால் சென்னிமலை ஒரத்துப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் தற்போது தண்ணீர் ஏதும் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே திறந்துவிடப்பட்டு வருகிறது.

இதனால் நொய்யல் ஆற்றில் தற்போது செல்லும் மழை நீர் வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி சாய தொழிற்சாலை நிறுவனத்தினர் சாயக்கழிவு நீரை இரவு நேரங்களில் அதில் கலக்க செய்தனர். தற்போது முத்தூர் அருகே உள்ள மு.வேலாயுதம்பாளையத்தில் திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் நொய்யல் ஆற்றில் செல்லும் நீர் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. சாயக்கழிவுகள் மழை நீருடன் வெள்ளம் போல் நொய்யல் ஆற்றில் செல்கிறது. இதனால் நொய்யல் ஆற்றுநீர் ஒருவித துர்நாற்றத்தை வீசுகிறது.

நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியில் மறைமுகமாக செயல்பட்டு வரும் சாயத்தொழிற்சாலைகள் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் கலந்துவிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நொய்யல் ஆற்றில் செல்லும் சாயக்கழிவின் காரணமாக திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் மற்றும் நகர, கிராமப்பகுதிகளில் குடிநீர் ஆதாரங்களில் மீண்டும் சாயக்கழிவுகள் கலந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூலம் திருப்பூர் பகுதியில் மறைமுகமாக செயல்பட்டு தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை கலக்கும் சாயத்தொழிற்சாலைகளை உடனே கண்டறிந்து அவற்றை சீல் வைத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story